வைரலாகும் ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் நம்பி புகைப்படம்

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் படத்திற்கு பல வருட முயற்சிகளுக்கு பிறகு தற்போது திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அதிக அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் நிறைய இருப்பதால் அவற்றுக்கெல்லாம் மிகப்பொருத்தமான நடிகர்களை பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

முன்னணி கதாபாத்திரங்களை தவிர இந்த கதையில் உலா வரும் சில முக்கிய கதாபாத்திரங்களில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானது. நாவலாக படிக்கும்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரமும் இது என்று சொல்லலாம். கதையின் போக்கில் ஆரம்பத்தில் அப்பாவியாக, நகைச்சுவை கலந்த கதாபாத்திரமாக நகரும் ஆழ்வார்க்கடியான் நம்பியின் கதாபாத்திரம் கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவரது சிகை அலங்காரம் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது, தனது கதாபாத்திர தோற்றத்தில் இயக்குனர் மணிரத்தினத்துடன் ஜெயராம் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.