சந்திரமுகி 2 படப்பிடிப்பு துவக்கம் : ரஜினியிடம் ஆசி பெற்ற லாரன்ஸ்

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. மலையாளத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான மணிசித்திரதாழ் என்கிற படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு கமர்ஷியல் அம்சங்களுடன் மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார் இயக்குனர் பி.வாசு.

ஸ்பிளிட் பர்சனாலிட்டி என்கிற ஒருவித மனநோயை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதுடன் படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது. அப்போதுதான் தமிழில் நுழைந்திருந்த நயன்தாரா இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ஸ்டார் வேல்யூவை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்றும் அதில் ரஜினிகாந்த் நடிப்பாரா என்றும் ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்தபடி இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும், முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார் என்று லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் உறுதியானது.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. படப்பிடிப்புக்கு கிளம்பி செல்வதற்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்று அதன் பிறகே படப்பிடிப்பிற்கு கிளம்பி சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.