இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டார்.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்களின் போராட்டத்தை கண்டு மாலத்தீவு நாட்டிற்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, அங்கிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார்.

Sri Lanka Crisis: இலங்கை புதிய அதிபர் யார்..? – 7 நாட்களில் முடிவு!

இதை அடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். மேலும், ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அவர் அனுப்பி வைத்தார். கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா முறைப்படி ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக் கொண்டார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, வரும் 20 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபர் தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.