Presidential Election: 60 சதவீத வாக்குகளுடன் ஜனாதிபதி ஆகிறார் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறங்குகிறார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முன்னாள் ஆளுநர் திரெளபதி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகள், திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

அதாவது, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின், பிஜூ ஜனதா தளம், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அதிமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோண்மணி அகாலி தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா ஆகிய கட்சிகள், திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. இதில், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா ஆகிய கட்சிகள், பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில், மொத்த வாக்குகளில், 60 சதவீத வாக்குகள் திரெளபதி முர்முவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. வேட்புமனு தாக்கலின் போது, சுமார் 50 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆதரவால், 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எனவே, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக, திரெளபதி முர்மு பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்கும் திரெளபதி முர்மு சொந்தக்காரர் ஆகப் போகிறார். குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு பிறகு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும், திரெளபதி முர்மு அடையப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.