புதுடெல்லி: நாடு முழுவதும் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் 75 நாட்களுக்கு போடப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இதுவரை 199.44 கோடிக்கும் (1,99,44,72,253) அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,32,789) தடுப்பூசிகள் போடப்பட்டன. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகின்றன. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது. இரண்டாவது டோஸ் செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். அதன்படி இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒன்றிய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஒன்றி சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 75 நாள் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இதுவரை 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.