உ.பி: புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29-ந் தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35-ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையுடன் இணைகிறது.

இந்த விரைவுச்சாலை பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புந்தேல்கண்ட் விரைவுச் சாலை பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கத்தை அளிக்கும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.