இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

கொழும்பு,

இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த மே மாதம் நடந்த மக்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த 13-ந்தேதி அதிகாலையில் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தவாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தார்.

மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்ததால் நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அத்துடன் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே (வயது 73) நேற்று முறைப்படி பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகியதை தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருப்பதை நாடாளுமன்றத்தில் இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தின் மூலம் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் எனக்கூறிய அவர், இதற்கான வேட்புமனுக்கள் 19-ந்தேதி பெறப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் இன்று கூடுகிறது. இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக்கொண்டநிலையில் கூட்டத்தில் பங்கேற்க எம்.பி.களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் உருவாகியுள்ள சட்டம்-ஒழுங்கு பாதிப்பை சீரமைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். இதற்காக ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக்கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் எனக்கூறிய அவர், இதற்காக அனைத்துக்கட்சி அரசு அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இடைக்கால அதிபராக தனது முதல் பணி, 19-வது சட்ட திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவதுதான் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

அதிபரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்த சட்ட திருத்தத்தை கோத்தபய ராஜபக்சே ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போராட்டம் மற்றும் அதிகார மாற்றங்கள் ஒருபுறம் நடந்தாலும் எரிபொருள் பற்றாக்குறையும் கடுமையாக நீடித்து வருகிறது. இதனால் பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, வருகிற 18-ந்தேதி மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகள் 20-ந்தேதி வரை மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.