புனே: மகாராஷ்டிராவில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் மூலம் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தி கமாண்ட் ஹாஸ்பிடல் சதர்ன் கமாண்ட் மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவரது உடலை தானம் செய்ய, அந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்மதித்தனர். அதையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழுவினர் முக்கிய உடல் உறுப்புகளை அகற்றி பாதுகாத்து வைத்தனர். அதன்பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சைக்காக காத்திருந்த இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 5 பேருக்கு சில உறுப்புகள் பொருத்தப்பட்டன. அதனால், அவர்களுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்துக்குள்ளான இளம்பெண் தனது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது, மூளைச்சாவு அடைந்தார். உடனே அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் வகையில், மாற்று அறுவை சிகிச்சை குழுவினர் துரிதமாக செயல்பட்டனர். அதன்மூலம் இரண்டு ராணுவ வீரர்களுக்கு அந்த பெண்ணின் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. அவரது கண்கள் ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை புனேவில் உள்ள ரூபி ஹால் கிளினிக் நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மொத்தம் ஐந்து உயிர்களுக்கு அந்த பெண் புதுவாழ்வு கொடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.