தருமபுரி: வனப்பகுதியில் சடலமாக கிடந்த இரு கேரள இளைஞர்கள்; போலீஸ் விசாரணை

நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சார்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். சொகுசு காரை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்தக் கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்ட, கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
image
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் கோட்டை காவல் துறையினர் சடலங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது இருவரின் சடலம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. மேலும் சடலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரின் சடலத்தில் லேசான காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் கேரளாவைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிக்கோல் குருஸ் என்பது தெரியவந்தது.
image
இந்நிலையில் இது தற்கொலையா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு, இந்த வனப்பகுதியில் வீசிச் சென்றனரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சொகுசு கார் மற்றும் ஒரு சில உடைமைகளை கைப்பற்றினர். நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.