பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் மிக முக்கியமான மாநிலமாக குஜராத்தை, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கவனித்து வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம், இந்தாண்டு இறுதியில் அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்தான். ஏற்கெனவே டெல்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, கடந்த மார்ச்சில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் தனிப்பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, குஜராத்திலும் கால் தடம் பதிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முனைப்புடன் செயல்பட்டுவருகிறர்.
அவ்வப்போது ஆளுங்கட்சியான பா.ஜ.க-வை சாடியவாறும், மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தவாறும் பேசிவருகிறர். இந்த நிலையில், குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், “நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதமளிக்கிறேன். அது என்னவென்றால், மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம். அதில் ஏதேனும் நீங்கள் தவறு கண்டால், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டாம். மேலும், அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். நகரம் முதல் கிராமங்கள் வரை எல்லா நாள்களிலும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வோம். அதுமட்டுமல்லாமல், 2021, டிசம்பர் 31, வரையில் நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்” என வாக்குறுதியளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், “இவர்கள், அமைச்சர்களுக்கு மின்சாரம் இலவசம், ஆனால் அது மக்களுக்கு இலவசமல்ல என்று கூறுகிறார்கள். நான் கூறுகிறேன், அமைச்சர்களின் அதிகாரம் இலவசம் என்றால் மக்களின் மின்சாரமும் இலவசம்தான். மேலும், இலவச மின்சாரத்தை பா.ஜ.க-வினர் எதிர்க்கிறார்கள். நானும், இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் அதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம் என்று டெல்லியில் பா.ஜ.க-வினருக்கு கூறியுள்ளேன்” என்றார்.