மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சிக்கான சந்திராயன் சீரிஸின் அடுத்த திட்டமான சந்திராயம் – 3 ஆகியவை எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி டி.என்.பிரதாபன் ககன்யான், சந்திராயன் – 3 திட்டம் எப்போது செயல்படத் துவங்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்விரு திட்டங்களும் அடுத்த ஆண்டுக்குள் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
ககன்யான் திட்டம் எப்போது?
ககன்யான் திட்டம் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கனவுத் திட்டமாகும். மூன்று மனிதர்கள் கொண்ட குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதே இதன் நோக்கம் ஆகும். இந்த ஆண்டு இறுதியில் இத்திட்டத்தின் அபார்ட் மிஷன் (Abort Mission) சோதனை துவங்கும் என அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். அபார்ட் மிஷன் என்பது விண்கலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் திட்டம் ஆகும். முதலில் இந்த சோதனையை வெற்றிகரமாக செய்து பார்த்த பிறகு, முழுமையான திட்டப் பணிகள் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல் வடிவம் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சந்திராயன் 3 திட்டம் எப்போது?
சந்திரயான் 3 ஒரு லேண்டர்-ரோவர் பணியாக திட்டமிடப்பட்டுள்ளது. சந்திராயன் – 2 திட்டத்தில் ஏவப்பட ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை தற்போது வரை சுற்றி வரும் போதிலும், லேண்டர் திட்டம் முழு வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது. இந்த லேண்டர் தரையிறக்கத்தை சீர்செய்து வெற்றிகரமாக லேண்டரை நிலவில் பரப்பில் இறக்குவதே சந்திராயன் – 3 திட்டம். இந்த லேண்டர் சந்திராயன் – 2 திட்டத்தில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் உதவியால் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் துவங்கும் என்று அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
ஆதித்யா எல்1 திட்டம் எப்போது?
சூரியனின் தோற்றம் குறித்த ஆய்வுகளை செய்வதற்காக சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான லெக்ராஞ்சி (எல் 1) புள்ளியில் இஸ்ரோவின் செயற்கைக் கோளை நிலைநிறுத்தும் ஆதித்யா எல்1 திட்டமும் 2023 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் துவங்கும் என்று அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM