சமரசம்? – விரைவில் ஓடிடியில் நயன்தாரா – விக்னேஷ் திருமணம்

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். மாமல்லபுரத்தில் ஒரு தனியார் ரெசார்ட்டில் கடற்கரை ஒட்டிய பகுதியில் நடந்த இவர்களது திருமணத்தில் ரஜினி, ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலகினர் பங்கேற்றனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த வீடியோ நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக இந்த தம்பதியருக்கு சுமார் 25 கோடி ரூபாய் பணம் தரப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தங்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் செயல்பட்டதாக கூறி நெட் பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் அதன் சமூகவலைதளத்தில், ‛‛நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரொமான்ட்டிக் போட்டோக்களை பகிர்ந்து விரைவில் நெட்பிளிக்ஸில் வருகிறார்கள்'' என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.