'தொண்டர்கள் வர வேண்டாம்' – அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை

சென்னை: வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தொண்டர்கள் வர வேண்டாம் என்று அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் “அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுலகத்தில் தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தொண்டர்கள் வர வேண்டாம் என்று அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில், ” நீதிமன்ற ஆணைப்படி தொண்டர்களுக்கு, கழக ஆதரவளர்களும் 20.08.2022 வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.