94 யூ-டியூப் சேனல்களை முடக்கியது ஏன்? – மத்திய அரசு விளக்கம்!

கடந்த 2021 – 2022 ஆம் நிதி ஆண்டில், 94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், நேற்று (ஜூலை 21), உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அளித்த பதிலின் விபரம்:

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளையும் தவறான பிரசாரங்களையும் செய்யும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது.

இந்த வகையில், 2021 – 22 ஆம் ஆண்டில் தவறான தகவல்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட, 94 யூ-டியூப் சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள், 747 வலைதள முகவரிகள் ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.

தகவல் தொழில்நுட்ப சட்டம், 69 – ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான போலி செய்திகளை கண்டறிந்து உண்மை தகவல்களை தெரிவிக்க பத்திரிகை தகவல் மையத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவு, 34 ஆயிரத்து 125 விசாரணைகளுக்கு பதில் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான, 875 போலி செய்திகளையும் அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.