ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை வீடுகளில் 3 நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்றுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ‘தேசியக்கொடி இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரையில், மக்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்,’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘ஆசாதிகா அமரீத் மகோத்சவ்’ என்ற பெயரில், 75வது சுதந்திர தினத்தை ஒன்றிய அரசு கடந்த ஓராண்டாக கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ (ஹர் ஹார் டிரையாங்கா) என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி இயக்கத்தை நாம் வலுப்படுத்துவோம். எனவே, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம். இந்த இயக்கம் தேசியக்கொடி உடனான நமது பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்,’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.