விமானத்தில் பயணிக்கு திடீர் மயக்கம் – முதலுதவி அளித்த தமிழிசை சவுந்தரராஜன்

விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்.
டெல்லியில் இருந்து ஹைதராபாதுக்கு செல்லும் விமானத்தில் இன்று அதிகாலை தமிழிசை சவுந்தரராஜன் பயணித்தார். விமானம் புறப்பட்டு ஒரு மணிநேரத்துக்கு பிறகு, அங்கு வந்த விமானப் பணிப்பெண் மருத்துவர்கள் யாராவது இருக்கிறீர்களா என கேட்டுள்ளார்.
அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் எழுந்து என்ன விஷயம் என வினவினார். அப்போது சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பணிப்பெண் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்தார். இதையடுத்து, அந்தப் பயணி கண் விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார்.
image
அதன் பின்னர் அவரது அருகிலேயே அமர்ந்து பயணித்த தமிழிசை சவுந்தரராஜன், ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மயக்கம் அடைந்த பயணிக்கு முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜனை சக பயணிகள் பாராட்டினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.