புதுக்கோட்டை : காவல்நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழா – பெண் காவலரை நெகிழ வைத்த காவல் உறவுகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சிறுஞ்சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரும், புல்வயலைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பெண் காவலர் ஜெயந்தி தற்போது நிறை மாத கர்ப்பிணியக இருக்கிறார். காதல் திருமணம் என்பதால், இரண்டு தரப்பு பெற்றோர்கள், உறவினர்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்துவது, கேள்விக்குறியாகவே இருந்துள்ளது. இதுபற்றி காவல் நிலையத்தில் உள்ள தனது சக காவலர்களிடம் ஜெயந்தி ஒரு முறை கூறியிருக்கிறார்.

ஜெயந்தியின் ஏக்கத்தை அறிந்த சக காவலர்கள், காவல் நிலையத்திலேயே வைத்து, வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். தடபுடலாக அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.

இலுப்பூர் டி.எஸ்.பி அருள்மொழி அரசு தலைமையில் போலீஸார் பல வகையான தட்டுக்களை எடுத்து வந்தனர். ஜெயந்திக்கு வளையல் அணிவித்தும், தம்பதிக்கு சந்தனம் பூசியும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சம்பிரதாயத்திற்கு என்று இல்லாமல், வீட்டில் உறவினர்கள் கூடி நடத்துவதைப் போலவே விழாவை நடத்தி ஜெயந்தியை நெகிழவைத்திருக்கின்றனர். இறுதியாக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் 5 வகையான உணவு வழங்கப்பட்டன. ஆய்வாளர்கள் சந்திரசேகரன், உஷா நந்தினி, உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், ஜெயஸ்ரீ சரண்யா உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.