புதுடில்லி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங், செப்., 1ல் துவங்குகிறது. கடந்த 2021ல் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, இந்தாண்டு, மே 21ல் நடந்தது. இதையடுத்து, ஜூன் 1ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங், வரும் செப்., 1ல் துவங்க உள்ளது. மத்திய பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகளில், 50 சதவீத அகில இந்திய இட ஒதுக்கீட்டிலும், மாநிலங்களுக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டிலும் மாணவர்கள் சேரலாம். ‘ஆன்லைன்’ வாயிலாக மருத்துவ கவுன்சிலிங் குழு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தும்.கடந்த ஆண்டு சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கான, 748 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த இடங்களை வீணாக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ‘கட் – ஆப்’ மதிப்பெண் தகுதியை பரிசீலிக்காமல் சிறப்பு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு கவுன்சிலிங், வரும் 27ல் நடக்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement