வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் – அதிகாலையில் நிகழ்ந்த சோகம்

திருக்கோவிலூர் அருகே வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை பாம்பு கடித்ததில், அந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 70 வயதான இவர், இன்று அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுவிரியன் விஷ பாம்பு, முதியவரின் கால் கட்ட விரலில் கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவர், கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து முதியவரின் மனைவி அன்னக்கிளி (60), உடனடியாக அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
image
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பழனிச்சாமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஷப் பாம்பு கடித்து பலியான பழனிச்சாமிக்கு ஏழுமலை (40) திருநாவுக்கரசு (35) ஆகிய இரண்டு மகன்களும், அலமேலு (30) என்கிற மகளும் உள்ளனர். உயிரிழந்த பழனிச்சாமியின் மனைவி அன்னக்கிளி, திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.