வங்கக் கடலில் அமையயுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் தமிழக மக்களின் நன்றிக்கடன் என அமைச்சர் எ.வ. வேலு குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி பயள்படுத்திய பேனா வடிவ நினைவிடத்தை மெரினா கடற்கரைக்குள் அமைக்க உள்ளனர்.
இந்த நினைவிடத்தை ரூ.80 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பேனா சிலை, 134 அடி உயரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாநில கடலோர மண்டல மேலாண்மை வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்கள் சந்திப்பின்போது விளக்கம் அளித்தார்.
அப்போது, ‘கடலுக்குள் பேனா சிலை நிறுவ முன்கூட்டியே திட்டமிடப்பட்டது” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘கலைஞருக்கு நினைவிடம் அமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். தமிழ் மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி கையெழுத்திட்டவர் அவர். ஆகவே அவருக்கு நினைவிடம் அமைப்பது தமிழ் மக்கள் செய்யும் நன்றிக்கடன்” என்றார்.
மேலும் அந்த நினைவிடத்திற்கு எதிராக சிலர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர். இது கலைஞருக்கு செய்யும் துரோகம். எனினும் தமிழ்நாடு அரசு கலைஞருக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்யும்” என்றார்.
இந்தச் சிலைக்கு செல்லும் வகையில் மெரினா கருணாநிதி சமாதியில் இருந்து நேராக சாலை அமைக்கப்படவுள்ளது. அதில் கண்ணாடி பாலமும் அமைக்கப்படவுள்ளது.
இந்த நினைவிடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே மகாராஷ்டிராவில் கடலில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.