திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (18). இவர் படிப்பதற்காக கல்லூரியில் விண்ணப்பத்தி இருந்தார்.
இந்நிலையில் அபிராமிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அபிராமிக்கு படிப்பதில் விருப்பம் இருந்ததால், திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் பெற்றோர் அபிராமியை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனவேதனையில் அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.