சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் – என்ன சொன்னார் தெரியுமா..?

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சமீபத்திய பேச்சு, அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் அந்தேரியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பங்கேற்றார். மகாராஷ்டிர மாநிலத்தில் வாழும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியதாவது:

இங்குள்ள மக்களுக்கு (மகாராஷ்டிர மக்கள்) நான் ஒன்றை கூறுவேன். அது என்னவென்றால், மகாராஷ்டிர மாநிலத்தை விட்டு குறிப்பாக மும்பை, தானேவை விட்டு குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேற்றப்பட்டால் உங்களிடம் பணம் இருக்காது. நாட்டின் நிதி தலைநகராகவும் மும்பை இருக்காது.

இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் தொண்டு செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் இந்த பேச்சு, மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் பேச்சு மகாராஷ்டிரா மீதான வெறுப்புணர்வை காட்டுவதாகவும், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், கடுமையாக உழைக்கும் மராத்தி மக்களை ஆளுநர் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பல்வேறு அமைப்புகள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.