`அதிமுக சட்டவிதிகள் டிசம்பர் 1, 2021 க்கு பின் மாற்றப்படவில்லை’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் தற்காலிக தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன், நிரந்தர அவை தலைவராக அறிவிக்கப்பட்டு ஏகமனதாக தீர்மானமொன்று மட்டும் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் குறித்தும், அப்பொதுக்குழு குறித்தும் சில வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், உரிமைகள் நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில், பொள்ளாச்சியை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் `டிசம்பர் 2021 க்கு பிறகு அதிமுக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளதா?’ என்று கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி கேள்வி கேட்டு விண்ணப்பித்தார்.
அதற்கு கடந்த ஜூலை 18ஆம் தேதி அவருக்கு பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், `அதிமுக சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை’ என தெரிவித்துள்ளது.
முன்னதாக அதிமுக இரு தரப்பாக (ஈபிஎஸ் தரப்பு – ஓபிஎஸ் தரப்பு) எனப்பிரிந்து, அதில் ஒற்றை தலைமையை ஏற்றுக் கொண்டு கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அவரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்திருந்தது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுகவில் செய்யப்பட்ட இந்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அன்றைய தினமே கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் யாருடைய முன்மொழிதல் தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆனையம் `எந்த சட்ட விதியும் மாற்றப்படவில்லை – அதிமுக சட்டவிதிகளை மாற்றக்கோரி எந்தவிதமான கடிதமும் பெறப்படவில்லை’ என தெரிவித்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM