Doctor Vikatan: தாம்பத்திய ஆர்வத்தைக் குறைக்குமா கொரோனா தொற்று?

எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் கொரோனா பாதித்தது. தொற்றிலிருந்து குணமான பிறகும் எனக்கு உடல் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, தூக்கமின்மையும், தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மையும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். இவற்றுக்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பிருக்குமா? இந்தப் பிரச்னைகளுக்கு பிரத்யேக சிகிச்சைகள் உண்டா?

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி…

உங்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அறிகுறிகள் `லாங் கோவிட்’ பாதிப்பாக இருக்கலாம். கோவிட் தொற்று ஏற்பட்டு குணமான பிறகும் 12 வாரங்கள் கழித்தும் உடல் உபாதைகள் தொடர்வதாகப் பலரும் சமூக வலைதளங்களில் அனுபவங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். அப்போதுதான் `லாங் கோவிட்’ என்ற வார்த்தையே பலருக்கும் அறிமுகமானது. இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கோவிட் தொற்று தீவிரமாக பாதித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த லாங் கோவிட் பாதிப்பு வரும் என்று முதலில் நம்பப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி, மிதமான தொற்றுக் குள்ளானவர்கள் முதல் அறிகுறிகளே இல்லாத `Asymptomatic’ நிலை தொற்றுக்குள்ளானவர்கள் வரை யாருக்கு வேண்டு மானாலும் லாங் கோவிட் பாதிப்புகள் வரலாம் என்று தெரிகிறது.

Covid

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

1. எந்தவிதமான தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் எதிர்ப்புசக்தி மாற்றங்கள்.

2. வைரஸ் தொற்றானது முழுமையாகக் குணமாகாமல், உடலில் ஒன்றிரண்டு திசுக்களில் தங்கியிருப்பதால் ஏற்படும் பாதிப்பு.

3. ஏற்கெனவே வந்த தொற்றுகள் (அறிகுறிகளே இல்லாத தொற்றுகள் உட்பட) மறுபடி திரும்புவது.

ஆனாலும், இவற்றின் உண்மைத்தன்மை இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே, லாங் கோவிட் பாதிப்புகள் வராமல் தடுக்க ஒரே வழி, கோவிட் தொற்று ஏற்படாதபடி நம்மைத் தற்காத்துக்கொள்வதுதான்.

லாங் கோவிட் பாதிப்புகளில் பிரதானமாகப் பேசப்பட்டது `பிரெயின் ஃபாகிங்’ எனப்படுவது. அதாவது மூளையின் செயல்திறன் சற்று மந்தமானது போன்ற உணர்வு, நினைவாற்றல் மங்குதல், குழப்பம் போன்ற அறிகுறிகள். ஆனால், அது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது என்பது பிறகுதான் தெரிய வந்தது. அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் வேறுபடலாம்.

COVID-19

கோவிட் தொற்று பாதித்திருந்தபோது ஏற்பட்ட இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, சுவை மற்றும் வாசனை தெரியாதது போன்ற அறிகுறிகள், தொற்றிலிருந்து குணமான பிறகும் பல வாரங்களுக்குத் தொடரும். சிலருக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய், சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்ட இணை நோய்கள் இருக்கும். லாங் கோவிட் பாதிப்பில் இந்த நோய்கள் சிலருக்கு தீவிரமாகலாம். பல வருடங்களுக்கு முன்பு காசநோய் வந்து குணமாகியிருக்கலாம், அது மீண்டும் திரும்பலாம்.

எனவே, லாங் கோவிட் பாதிப்பில் இப்படிப் பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும். கோவிட் தொற்று பாதித்தாலும் அது லாங் கோவிட் பாதிப்பாக மாறாமலிருக்க என்ன செய்வது என்பது குறித்த தெளிவு இன்னும் நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

தூக்கமின்மை, முடி உதிர்வு, செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாதது போன்ற பிரச்னைகளும்கூட லாங் கோவிட் பாதிப்பால் ஏற்படலாம் என்று தெரிகிறது.

தீவிர கோவிட் பாதிப்பு, வயதானவர்களைக் குறிவைத்தது போல, லாங் கோவிட் பாதிப்பானது இள வயதினரை, அதிலும் குறிப்பாக, பெண்களை அதிகம் தாக்குவதாகத் தெரிகிறது. லாங் கோவிட் பாதிப்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற் கில்லை. சிலருக்கு ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. சிலருக்கு ஸ்ட்ரோக் வருகிறது.

கொரோனா பாதிப்பு – சித்தரிப்பு படம்

இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றுதான். கோவிட் பாதிப்பை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. லாங் கோவிட் பாதிப்புக்கென பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. எனவே, கோவிட் வராமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பதும், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதும், மூன்றாவது தவணையையும் செலுத்திக்கொள்வதும்தான் ஒரேவழி.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.