காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், ஹவுரா அருகே அவர்களது காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடம் இந்த பணம் யாரிடம் பெறப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பயணித்த காரில் இருந்து கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.