இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவனே கத்தியால் குத்திய நிலையில், இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் மதன் (22). இவரும் புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்ற பெண்ணும் நான்கு மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சூன் மாதம் முதல் தனது மகளை காணவில்லை என தமிழ்ச்செல்வியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிசார் தமிழ்ச்செல்வியின் கணவர் மதனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த மாதம் 25ஆம் திகதி ஆந்திர மாநிலம் சித்தூரின் கோனே அருவிக்கு மதன் தனது மனைவி தமிழ்ச்செல்வியை சுற்றுலா என்று கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மதன், காதல் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
அதன் பின்னர் தமிழ்ச்செல்வியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு அவர் கூறிய இடத்திற்கு பொலிசார் விரைந்தனர். அப்பகுதி முழுவதும் தேடியும் தமிழ்ச்செல்வியை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் ஆந்திர பொலிசாரின் உதவியுடன் கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை தமிழக பொலிசார் ஆய்வு செய்தனர். அதில் தன் மனைவியை அழைத்துச் சென்ற மதன், திரும்பி வரும்போது தனியாக வந்தது தெரிந்தது.
பொலிசார் மூன்று நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் தமிழ்ச்செல்வி குறித்த விவரம் தெரியவில்லை. எனினும் பொலிசார் இது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.