மதுரை: மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்த மேற்கு வங்க மாநில கட்டிடத் தொழிலாளி மரணம் அடைந்தார்.
மதுரை – நத்தம் சாலையில், கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கலைஞர் நூலகம் கட்டுமான பணி நடக்கிறது. 6 மாடி கட்டிடத்திற்கான இப்பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளிகள் அவ்வளாகத்தில் தங்கியிருந்து கொணடு கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர்.
காலை, மாலை என ஷிப்ட் முறையில் பணி செய்கின்றனர். இவர்களுடன் மேற்கு வங்க மாநிலம் மேகாசாரா மாவட்டம், முஸ்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசிமைதீன் என்பவரின் மகன் இக்பால் (25) என்பவரும் தங்கியிருந்து வேலை பார்த்தார். இவர், வழக்கம் போல் இன்று காலை ஷிப்டில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், 5-வது மாடியில் சாரத்தில் நின்று சுவரில் சிமென்ட் பூச்சு பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 11 மணிக்கு மேல் எதிர்பாராதவிதமாக சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் ஆட்டோவில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், விழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.