குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்க உள்ளீடு நடைமுறை

பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத் Sri Lankan Identification Number/SLIN தை உள்ளீடு செய்யும் நடைமுறை, இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 14 திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறக்கும்போது , பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும்.
இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும், பரீட்சார்த்த திட்டம்,
கம்பஹா,தெஹிவளை,ஹங்குராங்கெத்த,குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பிறப்புச் சான்றிதழை பெறும் ஒருவர், தனக்கு 15 வயது பூர்த்தியானதன் பின்னர், தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கையில், மேற்படி பிறப்பு சான்றிதழில் உள்ள அடையாள இலக்கத்திலேயே தனக்கான தேசிய அடையாள அட்டையை பெறமுடியும்.

இந்த முறைமையின் ஊடாக, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது, பிறப்பு முதல் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும், ஒரே அடையாள இலக்கம் பயன்படுத்தப்படுவதால், தனி நபர் கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தரவுகளை திரட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலகுவானதாக அமையும்.

மேலும், ஒரே இலக்கத்தின் கீழ் அனைத்து தரவுகளும் காணப்படுவதால், குறித்த நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு இலகுவாக சேவைகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் என ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.