அகமதாபாத்: அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய குஜராத் மாணவர்கள் மூலம், ஆங்கில திறனறியும் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. சர்வதேச அளவில் வெளிநாடுகளில் படிக்கவும், வேலைக்கு செல்லவும் நடத்தப்படும் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ்-ல் ஆங்கிலப் புலமைமிக்க மாணவர்கள் கூட 7 மதிப்பெண்கள் பெற மிகவும் சிரமப்படுவார்கள். அப்படியிருக்கையில், ஆங்கிலமே தெரியாத குஜராத் மாணவர்கள் எப்படி இவ்வளவு மதிப்பெண் பெற்று கனடா வந்தனர் என்பது குறித்து விசாரிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் குஜராத் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.