மாட்ரிட்-”வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், அமைச்சர்கள் ‘டை’ அணிவதை கைவிட வேண்டும்,” என, ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பாவில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, கடும் வெப்பம் நிலவுகிறது. வெப்பம் தாங்காமல், 1,000த்திற்கும் அதிகமானோர் இறந்து உள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், எரிசக்தியை சேமிக்கவும், கழுத்தில் ‘டை’ அணிவதை கைவிட்டுள்ளார். அத்துடன், அனைத்து அமைச்சர்களும், தனியார் நிறுவன அதிகாரிகளும், டை அணிவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.”டை அணிவதை தவிர்த்தால், மிகக் குறைவான ‘ஏசி’ வசதியில் கூட சிரமமின்றி பணியாற்றலாம். இதனால், எரிசக்தி செலவு மிச்சமாகும்,” என, பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார். ஸ்பெயின் இதர ஐரோப்பிய நாடுகளை பின்பற்றி, எரிசக்தி சேமிப்பு திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால், எரிவாயுவுக்கு ரஷ்யாவை நம்பியிருக்கும் நிலையை மாற்ற ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கவும், எரிசக்தி பயன்பாட்டை குறைக்கவும், பல கோடி ரூபாய் திட்டத்தை அவை அறிவித்துள்ளன. ஸ்வீடன், எரிசக்தி பயன்பாட்டை குறைக்க, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும், அலுவலகங்களில் குளிர்சாதனங்களை குறைவாக இயக்கவும் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement