‘இந்தி தெரியாம பாலிவுட்டுக்கு வர்றாங்க’ தமிழ் இயக்குனர்களை விமர்சித்த அனுராக் கஷ்யப்

மும்பை: பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், தென்னிந்திய படங்கள்தான் வட இந்தியாவிலும் சாதித்து வருகின்றன. அந்த படங்களுடன் ஒப்பிடும்போது, பாலிவுட் படங்கள் சமீபகாலமாக சாதிக்கவில்லை. தோல்வியை தழுவி வருகின்றன என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் தந்த அனுராக் கஷ்யப், ‘இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை. அது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றியே இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் இந்தியில் படம் எடுப்பதனால் அது இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மாறினால் தான் இந்தி படங்களுக்கு வெற்றி கிடைக்கும்’ என்றார். இவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோரை தொடர்ந்து இப்போது அட்லீ, சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி உள்ளிட்ட தமிழ் பட இயக்குனர்கள், இந்தி படங்களை இயக்கி வருகிறார்கள். அவர்களை மனதில் வைத்துதான் அனுராக் கஷ்யப் இதுபோல் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவை சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அனுராக் கஷ்யப்பின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.