Monkeypox: அச்சுறுத்தும் குரங்கம்மை.. 21 நாட்கள் தனிமை – அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து, குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இந்தியாவில், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 6 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, கேரள மாநிலத்தில் ஜூலை 30 ஆம் தேதி உயிரிழந்த 22 வயது இளைஞா் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், குரங்கம்மை நோய் பரவலை தடுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு மாநில சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், குரங்கம்மை அறிகுறி உள்ளவர்களை 21 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளை தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாநில அரசுகளும் சா்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.