வேலைக்குச் சேர்ந்த 10-வது நாளில் பணத்துடன் எஸ்கேப்; போலீஸிடம் வசமாக சிக்கிய அண்ணன், தம்பி – எப்படி?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, ஐசக் தெரு சந்திப்பில் பூக்கடை போலீஸார், 1-ம் தேதி அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு பேர் பெரிய பையுடன் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் சந்தேகமடைந்து பையை சோதனை செய்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி நாணயங்கள், வெள்ளி சிலை ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக விசாரித்தபோது, கடையிலிருந்து திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் பூக்கடை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பிகாராம்

விசாரணையில் ஒருவரின் பெயர் ராஜராம் (23) என்றும், ராஜஸ்தான் மாநிலம் என்றும் இவரின் அண்ணன் பிகாராம் (32) எனவும் தெரியவந்தது. கடந்த பத்து நாள்களுக்கு முன் ராஜராம், சௌகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவில் பிளாஸ்டிக், பரிசு பொருள்கள் கடை நடத்திவரும் ஜெலாம்சிங் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த 31-ம் தேதி கடையை பூட்டி சாவியை ராஜராம், ஜெலாம்சிங்கிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் 1-ம் தேதி விடியற்காலையில் சாவியை வாங்கிக் கொண்டு கடைக்கு வந்த ராஜராம், தன்னுடைய அண்ணனுக்கு தகவல் தெரிவித்து கடைக்கு வரும்படி கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் கடையிலிருந்த 7,85,000 ரூபாய், 19 வெள்ளி நாணயங்கள், வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை திருடியுள்ளனர். ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்ட இருவரும் நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போதுதான் ரோந்து போலீஸாரிடம் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து பணம், வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி நாணயங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் விசாரணைக்குப்பிறகு அண்ணன் தம்பியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.