ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் அணகாப்பள்ளியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆந்திராவின் அணகாப்பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் 2000 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு இருந்த போது, திடீரென விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்தவர்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் அரசு அதிகாரிகளும் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயு கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழியர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.