ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான புடவைகள், 4 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொழில் போட்டி காரணமாகவா அல்லது திருட்டு கும்பல் கைவரிசை காட்டினார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தர்மலிங்கமும் அவரின் மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன்களைப் பார்க்கக் கடந்த ஜூலை 30-ம் தேதி சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து திரும்பிய தர்மலிங்கம், வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் கதவு பூட்டும் கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில், இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஆண்டிமடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிமடம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா இரண்டாயிரம் மதிப்புள்ள 400 காட்டன் புடவைகள்.
மற்றும் பட்டுப் புடவைகள், மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து அரியலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளைச் சேகரித்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் ஆண்டிமடம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “இது தொழில் போட்டியா அல்லது திருட்டு கும்பல் இச்செயலில் ஈடுபட்டார்களா என்று விசாரித்து வருகிறோம். இந்த சம்பவங்களைப் பார்க்கும் போது புடவையை மட்டுமே கொள்ளை அடிக்கும் கும்பலாக இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு பேசுங்கள்” என்றனர்.