செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்றது. 188 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உலகெங்கும் இருந்து முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். 10 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் இன்று நிறைவுக்கு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிறைவு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றயை தினம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள குதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை ஏற்படின் மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம்.
அதே போன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்று பிராட்வேயில் இருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.