அதிமுகவுக்கு நிதிஷ்குமார் சொல்லும் பாடம்: ஆளுமைன்னா என்ன தெரியுமா?

பீகார் அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் தேசிய அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ், இடதுசாரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இடது சாரிகள் 12 இடங்களில் வென்றனர்.

74 இடங்களை பாஜக வென்ற போதும், 43 இடங்களில் வென்ற ஐக்கிய தனதா தளம் கட்சிக்கு முதல்வர் பதவியை பாஜக விட்டுக்கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் 2019 மகாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா கட்சியுடன் முதல்வர் பதவியை முன்வைத்து நடந்த கருத்து மோதலும் அதன் விளைவாக சிவசேனா, கா

ங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் ஆட்சி அமைத்தது. அப்படியான சூழல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவிவகிக்க பாஜக பச்சை கொடி காட்டியது.

இப்போது பாஜக கூட்டணியை நிதீஷ்குமார் விட்டு விலகி வந்ததற்கும் மகாராஷ்டிரா அரசியலைத் தான் மறுபடியும் பார்க்க வேண்டியுள்ளது. சிவசேனாவின் எம்.எல்.ஏக்களையே அக்கட்சி தலைமைக்கு எதிராக திருப்பிவிட்டு பாஜக அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னோடு கூட்டணியில் இருப்பவர்கள், இதற்கு முன் கூட்டணியில் இருந்தவர்களின் அடிமடியில் கைவைப்பதை வழக்கமாக வைத்திருக்கும் பாஜக சிவசேனாவை துண்டாடியது போல் தங்களையும் துண்டாட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தே கூட்டணியை கைகழுவிவிட்டார் நிதிஷ்குமார் என்கிறார்கள்.

அவ்வாறு வெளியே வந்த நிதிஷ்குமாரை தாங்கிப் பிடிக்க காங்கிரஸும், ஆர்ஜேடியும் முன்வந்தது முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. 75 இடங்களை வைத்திருக்கும் போதும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் விட்டுக்கொடுத்துள்ளதால் ஐக்கிய ஜனதா தளத்தை துண்டாடும் பாஜகவின் திட்டம் தவிடுபொடியாகியுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நிதிஷ்குமாரின் இந்த மூவ் மூலம் அதிமுகவுக்கு பெரிய பாடம் இருக்கிறது என்கிறார்கள். “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. அப்போது பாஜகவுக்கு ஒரு இடம் கூட இல்லாத போதும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டோடு தான் எடப்பாடியின் ஆட்சி இருந்தது. அதே சமயம் அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பாஜக பக்கம் கொண்டு வரப்பட்டனர்.

ஒன்றிய அரசின் கையில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என எத்தனை ஆயுதங்கள் இருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நிதிஷ் தீர்க்கமான ஒரு முடிவெடுத்துள்ளார். அது போன்று துணிச்சலான முடிவை எடப்பாடி பழனிசாமியோ, சசிகலாவோ, ஓ.பன்னீர் செல்வமோ எடுப்பார்களா என்பது கேள்விக்குறியே. அந்த துணிச்சல் இல்லை என்றால் கட்சி கரைவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

ஜெயலலலிதாவை 25ஆண்டுகளாக சொத்துகுவிப்பு வழக்கு பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஆனாலும் மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வந்து பார் என்று சவால் விட்டார். அதனாலே அவரை நெருங்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அஞ்சின. பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையைவிட எதிர்த்து சமர் புரிய துணிச்சல் வேண்டும். அது தான் ஆளுமையை நிரூபிப்பதாக இருக்கும். இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா இதை புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.