வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
-
“டாக்டர் சார் எனக்கு உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது எதிலும் ஆர்வம் இல்லை. வயது 60 தான் ஆகிறது. இனியும் வாழ வேண்டுமா என்று அடிக்கடி தோன்றுகிறது”.
-
“என் மனைவி தான் நினைத்த அளவிற்கு நான் இல்லையோ என்று நினைக்கிறாள் என்னை ஒரு மாதிரியாக நடத்துகிறாள். இதை நினைத்து நினைத்தே எனக்கு வாழ்க்கையில் ஒரு விரக்தி தோன்றுகிறது”.
-
“என் உடலில் எந்தவித நோய்களும் இல்லை. ஆனால் என்னை அறியாமலேயே ஒரு வித மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற ஆண்களைப் போல நாம் ஏன் சந்தோஷமாக இல்லை என்ற எண்ணம் என்னை உறுத்துகிறது.”
-
“என் வயது 50 தான். என் கணவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். எனக்கு மாதவிடாய் நின்ற பிறகு, நான் முதுமை அடைந்து விட்டதாக என்னிடமிருந்து ஒதுங்கியே நிற்கிறார்.”
● “என் கணவர் சமீப காலமாக மிகுந்த பதட்டத்துடனும் ஒரு வித எரிச்சலுடனும் இருக்கிறார். காரணமின்றி என் மேல் கோபப்படுகிறார்”.
மேற்கண்ட அத்தனைப் பிரச்சனைகளுக்கும் பாலுணர்வு குறைவதினால் கூட இருக்கலாம். சற்று வயதானவர்கள் தனக்கு பாலுணர்வு குறைந்ததை நேரிடையாக டாக்டரிடம் சொல்லமாட்டார்கள். தயங்கி தயங்கி மேலே சொன்ன பிரச்சனைகள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டை டாக்டர்களிடம் கூறுவார்கள். இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பாலுணர்வு குறைவு இருக்கலாம் என்று எண்ணி தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.
மனிதனுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் கூட இரண்டு முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. ஒன்று பாலுணர்வு; அடுத்தது பசி. தன் சந்ததியைப் பெருக்கிக் கொள்ளப் பாலுணர்வும் தன்னையும் தன் மரபினையும் காப்பாற்றிக் கொள்ளப் பசியும் தேவைப்படுகின்றன.
இளமை பருவத்தில் தொடங்கி நடுத்தர வயதில் சிறிது குறைந்து, முதுமை வரை தொடர்ந்து இருக்கவல்லது பாலுணர்வு. உணவும், உறக்கமும் போல இதுவும் இயற்கையின் நியதியே. இதனை அவசியமற்றதென்றோ அல்லது அநாகரிகமானது என்றோ கருதக் கூடாது. வயது ஆக ஆகப் பாலுணர்வு சிறிதுசிறிதாகக் குறையும். இது எல்லோரும் அறிந்த ஒன்றே! முதுமையில் முற்றிலும் பாலுணர்வு இன்றி இருக்கவேண்டுமென்ற ஒரு பரவலான எண்ணம் நம் நாட்டிலுள்ளது. அது சரியன்று; முதுமையிலும் பாலுணர்வு தேவை. அதனைப் பல முதியவர் விரும்புகின்றனர்.
“ஒருவரது இளமைக்கும், பல்லாண்டு வாழ்வதற்கும் அவரது இளம் மனைவிதான் காரணம்” என்பர். முதுமையில் பாலுணர்விற்கு நம் நாட்டினர் மிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால், அதுபற்றி மிகுதியாக ஆய்வு நடத்தப்படவில்லை. ஆராய்ச்சி வல்லுநர்கள் இத்துறையிலும் தம் கவனத்தைச் செலுத்துதல் அவசியமாகும்.
ரஷ்யாவில் பாலுணர்வு பற்றிய ஆராய்ச்சி ஒன்றினை நடத்தினர். எலிகளை வகுப்பு, ‘ஆ’ வகுப்பு என இரண்டு வகுப்பாகப் பிரித்தனர். அ’ வகுப்பு எலிகளைத் தனியே வைத்து இனச் சேர்க்கையின்றி வாழ வைத்தனர். ‘ஆ’ வகுப்பு எலிகளை இனச்சேர்க்கையோடு வாழ வைத்தனர். சில மாதங்களில் இனச்சேர்க்கையின்றி தனித்து வாழ்ந்த ‘அ’ வகுப்பு எலிகள், உடல்நலம் குன்றி விரைவில் இறந்துவிட்டன. இனச்சேர்க்கையோடு வாழ்ந்த ’ஆ’ வகுப்பு எலிகள் உடல்நலம் குன்றாமல் நெடுநாட்கள் வாழ்ந்தன. இதனால் பாலுணர்வு உடலுக்கு கெடுதல் செய்வதில்லை என்பது உறதியாக தெரிகிறது.
இதே போல பல இடங்கில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நான் படித்த மருத்துவ இதழிருந்து சில செய்திகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
-
இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்க உதவுகிறது.
-
வாரத்தில் மூன்று முறை உடலுறவு வைத்துக்கொள்வது 120 கிலோ மீட்டர் ஜாகிங் (jagging) செய்வதற்கு சமமானதாகும்.
-
நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை சம நிலைப்படுத்துகிறது. உடலுறவுவிற்குப் பின்பு உடல் புத்துணர்ச்சியும், மனம் மிக்க அமைதியும் அடைகிறது.
-
கணவன் மனைவிக்கிடையே மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
-
துாக்கமின்மை, தலைவலி, மனச்சோர்வு மற்றும் தற்கொலை முயற்சி போன்றவைகளை வெகுவாகக் குறைக்கிறது.
ஆண்களிடம் தோன்றும் மாற்றங்கள்
ஆடவர்க்குச் சுமார் 50 வயதில் அவர்கள் உடலிலுள்ள டெஸ்டோஸ்டிரான் (Testosterone) எனும் ஹார்மோன் சிறிதுசிறிதாகக குறையத் தொடங்குகிறது. அதனால் ஆண்களுக்குப் பல தொல்லைகளும் விளைகின்றன. உதாரணம்: பசி குறைதல், எடை குறைதல், உடல் சோர்வடைதல், கவனம் குறைதல், பாலுணர்வு குறைதல் மற்றும் வீரியம் குறைதல் போன்றவையாகும். இத்தொல்லைகள் எல்லாம் வேறு பல காரணங்களினாலும் வருதலுண்டு. இரத்தச் சோகை, புற்றுநோய், மனச்சோர்வு போன்ற நோய்களினாலும் இத்தொல்லைகள் வரலாம். அதனால் இத்தொல்லைகள் ஹார்மோன் குறைவினால் மட்டும் வருகின்றனவா? நோய்களினால் வருகின்றனவா? எனக் கண்டறிதல் மிகவும் அவசியமாகும். ஒரு முதியவர் “டெஸ்டோஸ்டிரான்” ஹார்மோனின் அளவு 325 ng / 100 மி.லி. குறைந்திருந்தால், அவர் ஹார்மோன் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து கொள்ளலாம். இந்த ஹார்மோன் குறைவினால் ஆணுறுப்பின் வீரியத்தன்மை சிறிதுசிறிதாகக் குறையும்; வெளிப்படும் விந்துவின் அளவும் குறைவாயிருக்கும்.
பெண்களிடம் தோன்றும் மாற்றங்கள்
பெண்டிருக்கு மாதவிடாய் நிற்கும் வயதில் ஹார்மோன் குறையத் தொடங்கும். அதாவது ஆண்களைவிடப் பெண்களுக்குச் சற்று முன்பே இம்மாற்றம் நிகழும். முக்கியமாக ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) எனும் ஹார்மோன் 45-50 வயதில் குறையத் தொடங்கும். அதனால் பெண் இன உறுப்புகளில் சில மாற்றங்கள் நிகழும். உதாரணம்: இன உறுப்பின் அளவு சிறிதாகும். ஈரத்தன்மை குறையும், விரியும் தன்மையும் குறையும் மேலும் மார்பகங்களும் சரியும். அவற்றின் பருமனும் குறையும்.
வயதான பெண்கள் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தன்னுடைய தோற்றத்திற்கும், அழகிற்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆண், பெண் இருவரின் பாலுணர்வும் அவர்களுடைய வயது, உடல்நலம் மற்றும் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது.
முதுமையில் பாலுணர்வு குறையக் காரணங்கள்
-
ஹார்மோன் குறைவு: வயது ஆகஆக உடலிலிருக்கும் டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைவதால் வயதிற்குத் தகுந்தாற் போல் சிறிதுசிறிதாகப் பாலுணர்வும் குறையும். முதுமையில் பாலுணர்வு திடீரென்று குறைந்துவிடாது; அவ்வாறு குறையுமாயின் அது உடல் அல்லது மனநலம் சார்பாகத் தோன்றிய நோய்களாகத்தான் இருக்கும்.
-
முதுமையில் தோன்றும் பலவித நோய்கள்: நீரிழிவு நோய், புற்றுநோய், மனநோய், சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் தொடர்பான நோய், இதய நோய், காச நோய், சத்துணவுக் குறைவு, ஆண்-பெண் இன உறுப்புகளில் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை போன்றன.
-
பாலுணர்வு சரியாக இருந்தும் அதனைச் செயலாற்ற முடியாத நிலை: ஆஸ்துமா, பக்கவாதம், மாரடைப்பு, இடுப்புவலி, முழங்கால் வலி, உடற்பருமன் போன்றன.
-
உட்கொள்ளும் பலவித மருந்துகள்: உயர் இரத்த அழுத்தத்திற்கும், மனச்சோர்விற்கும், துாக்கத்திற்கும் கொடுக்கும் மருந்துகள்.
-
மதுவினைத் தொடர்ந்து குடிப்பவருக்கும் பாலுணர்வு குறையும்.
-
மாதவிலக்கு நிற்கும் போது ஏற்படும் தொல்லைகள் தொடருவதால்: உடற்பருமன், உடல்வலி, மூட்டு வலி, எரிச்சல், கவனக்குறைவு, முன்கோபம், அடிக்கடி முகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சிவத்தல், மார்பு படப்படப்பு போன்ற பலவிதத் தொல்லைகளினால் மனச்சோர்வு வருகிறது. இத்தொல்லைகள் வயது ஆகஆகச் சிறிது சிறிதாகக் குறையும். சில சமயங்களில் இது தொடர்ந்தும் இருப்பதுண்டு. அதனால், மனச்சோர்வு வரப் பாலுணர்வு குறைகிறது.
-
நம் நாட்டுக் கலாச்சார முறைப்படி முதுமையில் பாலுணர்வு கொள்வதை தவறாகவும், அருவறுக்கத் தக்கதாயும் கருதுகின்றனர். இவ்வெண்ணம் முக்கியமாக நடுத்தர வயது பெண்களிடமே மிகுதியாக உள்ளது. கூட்டுக் குடும்பம், தனித்து இல்லாத நிலை மற்றும் நிதித் தொடர்பான பிரச்சனைகளாலும் பாலுணர்வு மிகுதியாகப் பாதிக்கப்படும்.
சிகிச்சை முறைகள்
முதுமையில் பாலுணர்வு குறைவதற்கு பல நோய்களும் அதற்கு கொடுக்கும் மருந்துகளுமே முக்கிய காரணமாகின்றன. ஆகையால், அந்நோய்களுக்கு (உ.ம். நீரிழிவு நோய்) தக்க சிகிச்சை அளித்தாலே பாலுணர்வு பழைய நிலைக்கு வர வாய்ப்புண்டு. இதைப்போலவே நோய்களுக்குக் கொடுக்கும் மாத்திரைகளையும் (உ.ம்: உயர்ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை) குறைத்தோ அல்லது மாற்றியோ கொடுத்தால் பாலுணர்வு சரியாகிவிடும். பாலுணர்வு குறைய முதுமையில் மன அழுத்தமும் ஒரு முக்கியமான காரணமாகும். அதைக் கண்டறிந்து, அதற்கு தக்க சிகிச்சை அளித்தால் செக்ஸ் உணர்வு சரியாகி விடும்.
ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்க வயாக்ரா (Sildenafil – Viagra) என்கிற மாத்திரையை உபயோகிக்கலாம். இந்த மாத்திரை உடலுறவு கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த மாத்திரையை உபயோகப்படுத்துவதற்குமுன், அவர்களின் உடல்நிலையை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே அம்மாத்திரையை சிபாரிசு செய்யவேண்டும். இருதய நோயாளிகள் முக்கியமாக நைட்ரேட் (Nitrate) மாத்திரையை சாப்பிடுபவர்கட்கு இந்த செக்ஸ் மாத்திரைகளால் குறைந்த ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் வயிற்றுக் கோளாறுகள் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு.
முதுமையில் பாலுணர்வு குறைந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டறிய மருத்துவ வல்லுநரிடம் எவ்விதத் தயக்கமுமின்றி ஆலோசனை பெறுதல் நல்லது, இவ்வயதில் பாலுணர்வினை மிகுதிப்படுத்த ஊசிகளும் மருந்துகளும் உரிய பயனைத்தாரா. இவற்றறால் உடலுக்குத் தீய விளைவுகளே மிகுதி.
ஒன்று மட்டும் உறுதி; முதுமையில் பாலுணர்வினை விரும்பி அதனைக் கடைப்பிடிப்பார் நன்மையே அடைவர்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.