திருமலை: நாளை 11-ம் தேதி ஸ்ராவன பவுர்ணமி, 12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, 13, 14-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 15-ம் தேதி சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறைகள் வருவதால், பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். எனவே, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் திருமலைக்கு வருவோர் தங்களது பயணத்தை தள்ளி போட வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், 19-ம் தேதி கோகுலாஷ்டமி, 20 மற்றும் 21-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த 3 நாட்களும் கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே, இந்த 3 நாட்களிலும் கூட பக்தர்கள் திருமலை யாத்திரை குறித்து யோசித்து, முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தால் தவிர, திருமலைக்கு வருவதை தள்ளி போட வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
2-ம் நாள் பவித்ரோற்சவம்
திருமலையில் நடைபெறும் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று துணை சன்னதிகள், உற்சவமூர்த்திகளுக்கு பவித்ர பட்டு நூற்மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.