நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து நாங்கள் பிரிகிறோம் என்று சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்த நாளிலிருந்தே அவர்களைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இவர்கள் எந்தக் காரணத்திற்காகப் பிரிந்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சமந்தாவும், நாக சைதன்யாவும் எந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றாலும் சரி, அவர்களின் பிரிவு தொடர்பான கேள்விகளைதான் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இதனிடையே, ஆமீர் கான் நடித்துள்ள ‘லால் சிங் தத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாக சைதன்யா படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பேட்டி ஒன்றில் அவரிடம், “சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சைதன்யா, “சமந்தாவிற்கு ஹாய் சொல்லி ஹக் (hug) பண்ணுவேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் தனது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவைப் பற்றிப் பேசிய நாக சைதன்யா, “என் கைகளிலுள்ள டாட்டூவைப் போல் எனது ரசிகர்கள் பலர் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனது திருமண நாளைதான் நான் டாட்டூவாகப் போட்டிருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போடவேண்டாம். ஏனென்றால் சில விஷயங்கள் மாறலாம். இல்லை நானே கூட இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால் நீங்கள் டாட்டூ போட விரும்பினால் நான் போட்டிருப்பது போன்ற டாட்டூவைத் தேர்வு செய்ய வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.