காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் | புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுப் படுகொலை

பந்திப்போரா: காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

நேற்று காலை (ஆக..11 காலை) ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பந்திப்போரா மாவட்டத்தில் சும்பால் எனும் பகுதியில் பிஹாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வீட்டில் இருந்த முகமது அம்ரேஸ் என்ற அந்த நபரை தீவிரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள்.

இது குறித்து காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட ட்வீட்டில், நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிஹாரைச் சேர்ந்த முகமது ஆம்ரேஸ் படுகொலை செய்யப்பட்டார் என்று பதிவிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அண்மைக்காலமாகவே தெருவோர வியாபாரிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரை தீவிரவாதிகள் படுகொலை செய்வது அதிகரித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு 3 நாட்களே உள்ள நிலையில் அன்றாடம் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

மதுரை வீரர் உட்பட 4 பேர் வீர மரணம்: ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் தர்ஹால் பகுதியில் பர்கல் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று காலை 2 தீவிரவாதிகள் ராணுவ முகாமின் வேலியை கடக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் உட்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஸ்-இ-முகமது கைவரிசை: இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என காஷ்மீர் டிஜிபி தில்பங் சிங் கூறியுள்ளார். 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளனர் என காஷ்மீர் ஏடிஜிபி முகேஷ் சிங் தெரி வித்துள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.