ஈபிஎஸ் உயிருக்கு ஆபத்து..? போலீஸ் பாதுகாப்புக்கோரி டிஜிபியிடம் மனு..!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில், அவர் சுற்றுப்பயணம் முடித்துள்ளார். அவர், சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஏ.பி.மணிகண்டன், சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபர்களாலும், சமூக விரோதிகளாலும் பழனிசாமிக்கு அச்சுறுத்தல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில், விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவருக்கு தற்போதுள்ள போலீஸ் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து, உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி கட்சிக்கு உரிமை கொண்டாடி வருகிறார். மேலும், ஈபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கியதாகவும் அறிவித்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். இதனால், ஈபிஎஸ் வெளியேற்றிய நிர்வாகிகளால் அவருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி இந்த மனு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.