இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32… 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை

புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வருடங்களில், கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வியக்கத்தக்க அளவில் முன்னேறி தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்ற இந்தியா, நூற்றுக்கணக்கான ஆண்டு அந்நிய ஆட்சியால் வறுமை மற்றும் சீர்கேட்டின் புதைகுழியில் சிக்கியிருந்தது. சுதந்திரம் அடைந்து  75 ஆண்டுகாலப் பயணத்தில், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பீடுநடை போடுகிறது இந்தியா. கடந்த 75 ஆண்டுகளில், உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், நாடு இதுபோன்ற பல்வேறு சாதனைகளை செய்துள்ளது இந்தியர்களாகிய நமக்கு பெருமையளிக்கிறது.

அதிலும் குறிப்பாக, சுகாதாரத் துறையில் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் பல மாறுதல்கள் வந்துள்ளன. நாடு விடுதலை அடைந்தபோது, நாட்டில் சுகாதார வசதிகள் குறைவாகவே இருந்தன.

இந்தியா எவ்வளவு மாறிவிட்டது?

1951 ஆம் ஆண்டு மக்கள்தொகையின்படி, நாட்டு மக்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாக இருந்தது, இது 2022 இல் 70 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1 ஆயிரத்துக்கு 145 ஆக இருந்தது, இது தற்போது 2022ல் 27 ஆக குறைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன, அதன் தாக்கமும் வெளிப்படையாகத் தெரிகிறது.

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு சுதந்திரம் அடையும் போது, ​​50 ஆயிரம் டாக்டர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1947அம் ஆண்டில் நாட்டில் 30 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது 600-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இது மட்டுமின்றி, சுதந்திரம் அடைந்த போது 2,014 அரசு மருத்துவமனைகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன, தற்போது அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 23 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. அப்போது நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 725 ஆக இருந்தது, இன்று 23,391 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார உள்கட்டமைப்பில் மாற்றங்கள்
சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் நமது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. மருத்துவத் துறையில் 75 ஆண்டுகால இந்தியாவின் பயணம் அற்புதமானது. 1947 ஆம் ஆண்டில், இந்தியாவின் மருந்து சந்தை வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது,

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டு மக்களுக்கு தேவையான 80-90% மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. மற்ற நாடுகளை விட இந்தியாவில் மருந்துகளின் விலை மிக அதிகமாக இருந்தது, இந்த நிலை 1960 வரை இருந்தது. இந்தியா மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தியதால், தற்போது நிலைமை மாறிவிட்டது.

75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா உலகின் மருந்தகமாக மாறியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 2,462 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உலகளாவிய மருந்து ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 6% ஆகும். மருத்துவத் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உயர்ந்துவிட்டது.

ஆனால் மக்கள்த்தொகையை ஒப்பிடும்போது, இந்தியாவை விட சீனாவில் மருத்துவ வசதிகள் அதிகமாக உள்ளது. தற்போது நாட்டில் 2 ஆயிரம் பேருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கை மட்டுமே இருப்பதாகவும், 10 ஆயிரம் பேருக்கு 8.6 மருத்துவர்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 22க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக உலக வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மட்டுமே சுகாதார வசதிகளுக்காக செலவிடுகிறது, அதே நேரத்தில் சீனா 7% க்கும் அதிகமாக செலவிடுகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது சுதந்திரத்தின் நூறாவது ஆண்டில் உலகில் உன்னத நிலையை அடைய இந்தியா கட்டுப்படியாகக்கூடிய மற்றும் வலுவான சுகாதார அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசும் தொடங்கியுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன், எய்ம்ஸ் போன்ற பிரீமியம் சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனுடன், சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்க ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.