எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.15) திறந்துவைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தமர் காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கெனவே காந்தியடிகளின் சிலை இருந்துவரும் நிலையில், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் மற்றொரு முழு உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பிற்கு பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.