திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீரங்கம், நடராஜர் கோவில் கோபுரங்களில் பறந்த தேசியக் கொடி

நாடு முழுவதும் 76-வது சுதந்திரதின விழா துவக்கம் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம், சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் மலைக்கோட்டி உச்சியில் அமைந்துள்ள கொடிமரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல், சுதந்திர தின அமுது பெருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமான் சன்னதியில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடி வைத்து படைக்கப்பட்டது. பின்னர், கோயில் செயலாளர் சிஎஸ்எஸ் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் 142 அடி உச்சியில் 147 வது முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

வருடத்திற்கு இரண்டு முறை சுதந்திர தினம், குடியரசு தினம் தேசமும் பக்தியும் இணைந்து கடந்த 75 வருடங்களாக தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தொன்று தொட்டு தேசப்பற்றையும் இணைத்து பழங்காலத்தில் இருந்து இதை செய்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடன் கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் நடராஜர் கோவில் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

க. சண்முகவடிவேல் – திருச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.