பெண்கள் சக்தி குறித்து பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், பெண்கள் சக்தி குறித்து பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய தூண்களாவர். பெண்களின் முன்னேற்றம் மிக அவசியமானது. அவர்களுக்கு நாம் உரிய மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம்’ என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரீக் ஓ பிரையன் கூறுகையில், ‘இதை முழுவதும் ஏற்று கொள்கிறேன். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி ‘தீதி ஓ தீதி’ என கிண்டலாக பேசினார். இதை  உதாரணமாக கொண்டு, முதலில் நீங்கள்(மோடி) பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை கடைபிடிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் ராஜா கூறுகையில், ‘‘பெண்கள் மீதான தமது கட்சிக்காரர்களின் மனநிலை குறித்து  பிரதமர் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.  சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘நாடாளுமன்றம்,சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இன்னும் நிறைவேற்றப்படவில்லை’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.