சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, அந்த ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார். இந்த அறிக்கையில் உள்ள பரிந்தரைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம்:
- போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர்.
- குண்டு வருவது தெரியாமால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
- பூங்காவில் ஒளிந்து கொண்டு சுட்டனர்
- கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு.
- தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் இல்லை.
- போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல்
- போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்
- காவல் துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி
- போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார்
- பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் ஆட்சியர்.
- ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
- வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்.
- ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்.
- ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்து உள்ளனர்.
- தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.