
சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற நடிகர் ஜெயராம்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி, என பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார். மேலும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ஜெயராம், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு மாட்டு பண்ணை வைத்திருக்கிறார். இதில் 60க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு பல ஏக்கர் நிலங்களில் அவர் விவசாயமும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது . திருவனந்தபுரத்தில் நடந்த இந்த விழாவில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயிக்காக விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயராம் , பத்மஸ்ரீ விருதை விட இந்த விவசாயி விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கிறார். அதோடு பினராயி விஜயனிடம் தான் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமிற்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.