மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக துல்கரின் புதிய முயற்சி

மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி படங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ஹிந்தியிலும் கூட மூன்று படங்கள் நடித்து விட்டார். சமீபத்தில் தெலுங்கில் நேரடியாக இவர் நடித்த சீதாராமம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒரு பக்கம் நடிகராக பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வே பாரர் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி புதிய படைப்பாளிகளுக்கும் தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார் துல்கர்.

இந்த நிறுவனம் மூலமாக தயாரிப்பு மட்டுமல்லாமல் கலை சார்ந்த சில புதிய முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார் துல்கர் சல்மான்.. அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக, பிங்கர் டான்ஸ் என்கிற கலையை தனது நிறுவனம் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் துல்கர் சல்மான்.

மகிழ்ச்சியான சமூகம் என்கிற ப்ராஜெக்ட் வழியாக நடன இயக்குனர் இம்தியா அபூபக்கர் துணையுடன் இதை துவங்கியுள்ள துல்கர் சல்மான், கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் பயிலும் 324 பள்ளிகளில் இதை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த ப்ராஜெக்ட்டில் திருச்சூர் மெடிக்கல் காலேஜை சேர்ந்த டாக்டர்கள் சுமேஷ், சிஜூ ரவீந்திரன் ஆகியோரும் உறுதுணையாக நிற்கிறார்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக துல்கர் சல்மான் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.