டெல்லியில் அசோக் கெலாட், சசிதரூர் இருவரும் சந்திப்பு: காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி பேசியதாக தகவல்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படும் அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் திடீரென சந்தித்து பேசியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

அதே நேரம் காந்தி குடும்பத்தைச் சேராத ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்ளிட்ட சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகின. இதனை கடந்த வாரம்  புறம் தள்ளிய அசோக் கெலாட் ராகுல் காந்தி கட்சி தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருந்தார். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்ய போவதாக சசிதரூர் கூறியிருந்தார். கட்சி தலைமை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் அசொக் கெலாட்டை சசிதரூர் டெல்லியில் திடீரென சந்தித்து பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் எதிர்காலம் தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும் , சசிதரூரும் சந்தித்து பேசியிருப்பது காங்கிரஸ் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.